உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளது: ஐ.நா அமர்வில் மோடி தெரிவிப்பு
Date: 26th September 2021
உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த DNA தடுப்பு மருந்தை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாமெனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, COVID-19 தொற்றுக்கு எதிராக நாசி வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்வருமாறும் அதற்கான வளங்களும் வசதிகளும் தம்மிடம் காணப்படுவதாகவும் உலகிலுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் தமது உரையில் இந்திய பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்தியப் பிரதமர் மோடி நேற்றைய தினம் ஹிந்தியில் உரையாற்றினார்.
இந்தியாவை உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதற்கான பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மாசடைந்த நீர் இந்தியாவிற்கு மாத்திரமின்றி முழு உலகத்திற்கும் பாரியதொரு சவாலாக அமைந்துள்ளதாகவும் அவரது உரையில் குறிப்பிடப்பட்டது.
பிற்போக்கான சிந்தனை மற்றும் தீவிரவாத ஆபத்து உலகில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பிற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள், அது தமக்கே பாரிய அச்சுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தை பரப்புவதற்கோ பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கோ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
MA UBAIDULLAH