சென்னை ஏர்போட்டை விட்டு லக்கேஜுடன் வெளியே வந்து பெருங்களத்தூருக்கு ஆட்டோ பேசினேன்.
காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைபாஸ் வழியே கிண்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது. நான் சிதம்பரம் போக வேண்டும்.
"ஆட்டோ பெருங்களத்தூர் எவ்ளோப்பா?"
"500 ரூபாய் சார்"
"400 ரூபாய்க்கு வருவியா?"
"சார் 450 ரூபாய் ஏறுங்க சார்!"
சென்னைக்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது. தாம்பரம் தாண்டியது.
"ஏம்பா தம்பி நீ இந்த வழியா சவாரி போனா எங்க காலை டிபன் சாப்பிடுவ?"
"ரோட்டுக்கடைத்தான் சார்!"
"அப்ப நீ சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்து டிபன் சாப்பிட்டு போவோம்!"
இரண்டு கிலோ மீட்டர் தாண்டி ஒரு புளிய மர ஓரமா இருந்த தள்ளு வண்டி கிட்ட ஆட்டோ நின்றது.
ஒரு நடுத்தர வயது அம்மா நெற்றி நிறைய திருநீறு பொட்டு இல்லை கழுத்தில் தாலி இல்லை விதவை என சொல்லியது தோற்றம்.
"வாங்க சார்!" என்றது.
"இங்க தான் சார் வயித்துக்கு ஒன்னும் பண்ணாது!" என்றான்.
இட்லி, வடை, பொங்கல், பூரி, மசாலா டீ என கட்டினோம்.
"எவ்ளோம்மா? என்றேன்.
"150 ரூபாய் சார்!" என்றதம்மா. 200 ரூபாய் கொடுத்தேன்.
மீதியை சில்லரையாக பொறுக்கியது அந்தம்மா.
"ஞாயிற்றுகிழமை ஆபீஸ், கடை, ஃபோக்டரி எல்லாம் லீவுனால வியாபாரம் இன்னிக்கு டல் சார்!" என்றது.
"சரிம்மா 50 ரூபாய நீயே வச்சிக்க, நாளைக்கு இந்த பக்கமா வருவேன் வாங்கிக்கிறேன்!" என்றுகூறி புறப்பட்டோம்.
ஆட்டோக்காரர், "சார் நீங்க சிதம்பரம் போறீங்க. நாளைக்கு வருவேன்னு 50 ரூபாய அந்த அம்மாகிட்ட ஏன் விட்டுட்டு வர்றீங்க?"
"தம்பி இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹேட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 500 ரூபாய் அப்புறம் டிப்ஸ், டாக்ஸ் என 600 ரூபாய் கொடுத்திருப்போம் இல்லையா? எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவனும் தம்பி!
சங்கம் அமைப்பது, வசூல் செய்வது, அதன் மூலம் பொது சேவை செய்வது, புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது, உண்டியல் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை தம்பி, நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்பா!" என்றேன்.
ஹைவேயில் ஓரம் மலை, மரங்கள், தெடர்ந்து வரும் ரயில்வே லைன். பயணிகள் பஸ், லாரி, கார், அத்துடன் இளங்காலை காற்று இதமான சவாரி கடந்து பெருங்களத்தூர் வந்தது. இந்தாப்பா நீ கேட்ட 450 ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
"400 ரூபாய் போதும் சார்!"
"ஏம்பா?"
"அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிட்டட்டும் சார்!"
நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் கணக்கு.
தொடரட்டும் நமது புண்ணிய கணக்குகள் …
சிறுகதை
No comments:
Post a Comment
MA UBAIDULLAH